Thursday 8 September 2011

அல்லல்படும் "108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

12 மணி நேர பணிச்சுமை, பணியிட மாற்றம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறுகின்றனர்.தமிழ்நாடு அரசு மற்றும் ஜி.வி.கே. எமர்ஜென்ஸி மேனேஜ்மென்ட் அன்ட் ரிசர்ச்  நிறுவனத்தின் கூட்டு முயற்சியுடன் 2008-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் சுமார் 385 ஆம்புலன்ஸ்கள் செயல்படுகின்றன.ஆம்புலன்ஸ் ஒன்றுக்கு பைலட் (டிரைவர்) ஒருவரும், எமர்ஜென்ஸி மெடிக்கல் டெக்னீஷியன் ஒருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். டிரைவர்களுக்கு | 6,500; எமர்ஜென்ஸி மெடிக்கல் டெக்னீஷியனுக்கு | 7,500 என்ற நிலையில் மாத ஊதியம் வழங்கப்படுகிறது. 


12 மணி நேரம் பணியாற்றும் இவர்கள், பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும் வேளையில் திடீரென்று அழைப்பு வந்தால் பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டுச் செல்ல மேலும் 4 மணி நேரம் ஆகிறது.  ÷வாரம் ஒருநாள் விடுமுறை. அதைத் தவிர வேறு எந்த விடுமுறையும் கிடையாது. ஆள் பற்றாக்குறை காரணமாக சில நேரங்களில் வாரவிடுமுறைகூட எடுக்க முடியாத சூழல். இது தவிர, உயர் அதிகாரிகளால் அடிக்கடி பணியிட மாற்றம், பெண் ஊழியர்கள் இரவுப் பணிக்கு வர வேண்டிய கட்டாயம் போன்றவற்றால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். ÷திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பைலட் ஒருவர் தங்களது கோரிக்கைகளை மேலதிகாரிகளிடம் வலியுறுத்தியதற்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அவர் செல்லவில்லை. இதைக் காரணம் காட்டி அடுத்த சில நாள்களில் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.÷டிரைவரின் பணிநீக்க உத்தரவை ரத்து செய்வது, பணி நேரத்தை 8 மணி நேரமாகக் குறைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் 22 ஊழியர்கள் கடந்த பிப்ரவரி மாதம் மனு கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் அடுத்த சில நாள்களிலேயே வேறு மாவட்டங்களுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதில் ஒருவர் கன்னியாகுமரிக்கும், மற்றொருவர் நாகர்கோயிலுக்கும் மாற்றப்பட்டுள்ளார்.÷இதுகுறித்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிலர் கூறியதாவது. விபத்தில் சிக்குவோரை உடனடியாக மீட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதோடு, ஊசி போடுதல், குளுக்கோஸ் ஏற்றுவது உள்ளிட்ட பணிகளைச் செய்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கிறோம். சில நேரங்களில் பிரசவம்கூடப்  பார்க்கிறோம்.÷தற்செயல் விடுப்பு இருந்தும் தருவதில்லை. வார விடுமுறைகளில் பணி புரிந்தால் ஊதியமோ அல்லது வேறொரு நாள் விடுமுறையோ அளிக்கப்படுவதில்லை.மற்ற நாள்களில் விடுமுறை வேண்டும் என்றால் தொடர்ந்து 24 மணி நேரம் பணிபுரிந்து விட்டு பின்னர் விடுமுறை எடுத்துக்கொள்ளுமாறு கூறுகிறார்கள்.  இதுதொடர்பாக கேள்வியெழுப்பினால் உடனடியாகப் பணியிட மாற்றம்தான்.  வாகனங்களை நிறுத்தும் பகுதிகளில் நாங்கள் தங்குவதற்கு அறை எதுவும் கிடையாது. பணியில் இருக்கும் 12 மணி நேரமும் ஆம்புலன்ஸýக்குள்ளேயே இருக்கிறோம்.
குறிப்பாக, பெண்கள் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு பெரும் அவதிப்படுகின்றனர். பெண்களை இரவு நேரத்திலும் பணிக்கு வருமாறு கூறுவதால் அவர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே பெண்களுக்குப் பகல் நேரத்தில் மட்டுமே பணி வழங்க வேண்டும்.விபத்தில் சிக்கிய அடையாளம் தெரியாத சிலரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால் அங்கிருப்பவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்க மறுக்கிறார்கள். இதுதொடர்பாக பலமுறை அலுவலகத் தலைமை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ÷சில நேரங்களில் எங்காவது பிரச்னைகளில் சிக்கிக்கொள்ளும்போது, உயர் அதிகாரிகளைத்  தொடர்பு கொண்டால் அவர்கள் செல்போனை எடுப்பதில்லை.  சென்னையில் உள்ள கால் சென்டரிலும் ஆள்பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. சென்னையில் பணிபுரிபவர்களுக்கு பஸ் பாஸ் எடுப்பதற்காக மாதந்தோறும் | 600 வழங்கப்படுகிறது. ஆனால், மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. எனவே அனைவருக்கும் பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று கூறினர்.

No comments:

Post a Comment